லண்டன்: 2025 விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காலிறுதிப் போட்டிகள் பெரும் பரபரப்புடன் நடைபெற்று வருகின்றன. சில போட்டிகள் எதிர்பார்த்தபடியே முடிந்தாலும், சில முன்னணி வீரர்கள் கடுமையாகப் போராடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காலிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், பிரித்தானியாவின் கேமரூன் நோரியை எதிர்கொண்டார். நோரியை எதிர்கொள்வது ஒரு "கனவு கலைந்த இரவாக" இருக்கும் என்று அல்கராஸ் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
போட்டியின் தொடக்க சர்வீஸ் ஆட்டத்தில் 0-40 என பின் தங்கியதால், ஒரு கணம் அதிர்ச்சி காத்திருக்கிறதோ என்று தோன்றியது. ஆனால், அந்த அச்சுறுத்தலை அல்கராஸ் உடனடியாக முறியடித்தார். அதன்பின்னர் அசுர வேகத்தில் முன்னேறிய அவர், 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் நோரியை வீழ்த்தி, அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறினார். அல்கராஸ் தற்போது 23 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். இது அவரது எட்டாவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியாகும். அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை அவர் எதிர்கொள்கிறார்.
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், உலகின் நம்பர் 1 வீராங்கனை அரியனா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சீக்முண்டுக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார். மூன்று மணி நேரம் நீடித்த இந்தப் போட்டியில், 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று தனது மூன்றாவது விம்பிள்டன் அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆட்டம் முழுவதும் 14 சர்வீஸ் பிரேக்குகள் நிகழ்ந்தன. சபலென்காவின் இந்த உணர்வுபூர்வமான வெற்றி, அவரது மன உறுதியை வெளிப்படுத்தியது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், அமண்டா அனிசிமோவா, அனஸ்தேசியா பாவ்லிசென்கோவாவின் கடுமையான சவாலைத் தாண்டி 6-1, 7-6(9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் விம்பிள்டன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். வெற்றிக்குப் பிறகு அவர் மைதானத்திலேயே மகிழ்ச்சியில் சரிந்து விழுந்தது கவனத்தை ஈர்த்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஐந்தாம் நிலை வீரரான டெயிலர் ஃபிரிட்ஸ், காரன் கச்சனோவுக்கு எதிரான விறுவிறுப்பான நான்கு செட் ஆட்டத்தில் (6-3, 6-4, 1-6, 7-6(4)) போராடி வெற்றி பெற்று தனது முதல் விம்பிள்டன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
இன்று (ஜூலை 9) நடைபெறும் விம்பிள்டன் காலிறுதிப் சுற்றில், மிரா ஆண்ட்ரீவா - பெலின்டா பென்சிச், ப்ளேவியோ கோபோலி - நோவக் ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் - லியுட்மிலா சாம்சோனோவா, மற்றும் ஜானிக் சின்னர் - பென் ஷெல்டன் ஆகிய முக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நட்சத்திர வீரர்களின் மோதல்கள் விம்பிள்டன் தொடரை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளன.