லண்டன்: 2025 விம்பிள்டன் தொடரில் ஆட்டங்கள் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. சில முன்னணி வீரர்கள் அசத்தலான வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், டென்னிஸ் உலகின் சில நட்சத்திரங்கள் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து வெளியேறியுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், பலம் வாய்ந்த அரியனா சபலென்கா, இங்கிலாந்தின் உள்ளூர் நட்சத்திரம் எம்மா ராடுகானுவை கடுமையாகப் போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ராடுகானுவின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகா, தனது ஆட்டத்தை சிறப்பாகத் தொடங்கினாலும், பாவ்யுசென்கோவாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். வெளியேறிய பிறகு, "என்னைப்பற்றி நேர்மறையாக சொல்ல எதுவும் இல்லை," என்று ஒசாகா கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான மேடிசன் கீய்ஸ், சியகெமுண்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். இதற்கிடையில், அனிசிமோவா கடைசி 16 சுற்றுக்கு முன்னேற, அதிர்ஷ்டசாலி வீராங்கனை சியராவின் விம்பிள்டன் கனவுப் பயணம் தொடர்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் நான்கு செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குச் சென்றார். அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், டேவிடோவிச் ஃபோகினாவை வீழ்த்தி கடைசி 16 சுற்றுக்குள் நுழைந்தார். நிறுத்தப்பட்டிருந்த தனது ஆட்டத்தில், மீண்டும் ஆடிய பென் ஷெல்டன் வெறும் 55 வினாடிகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
2025 விம்பிள்டனின் விறுவிறுப்பான கட்டத்தில், ஜானிக் சின்னர், ஸ்வியாடெக் மற்றும் நோவக் ஜோகோவிச் போன்ற முன்னணி வீரர்கள் தங்கள் வெற்றியைத் தொடரும் முனைப்புடன் தங்கள் அடுத்த சுற்றுப் போட்டிகளை எதிர்நோக்கி உள்ளனர்.