சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் பாகிஸ்தான் அணிகளையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறது. தற்போது 5 போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றி மூன்று தோல்விகளுடன் நான்கு புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கும் அரை இறுதி வாய்ப்பு ஏற்பட்டிருப்பது அந்த நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.

கடந்த சில போட்டிகளாக இரு அணி ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா, இந்த வெற்றி மிகவும் ருசியாக இருக்கிறது என்று கூறினார்.
இது குறித்து பேசி அவர் நாங்கள் சேசிங்கை மிகவும் அற்புதமாக செய்தோம். இனி எஞ்சி இருக்கும் போட்டியை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இன்று நாங்கள் எவ்வாறு சேசிங் செய்தோமோ அதை போல் எஞ்சிய ஆட்டங்களிலும் மீண்டும் செய்வோம். நாங்கள் தரமான கிரிக்கெட்டை கடந்த சில போட்டிகளாக வெளிப்படுத்தி வருகிறோம்.
ஆசிய கோப்பையில் விளையாடும் போது எங்கள் அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. ஆசிய கோப்பையிலும் நாங்கள் நன்றாக தான் விளையாடினோம். முதலில் இங்கிலாந்தை வீழ்த்தினோம் தற்போது பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறோம். இனி எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெறுவோம் என நான் நம்புகிறேன். நாங்கள் பாசிடிவ் கிரிக்கெட்டை தொடக்கத்தில் இருந்து விளையாடுகிறோம் .
எங்கள் நாட்டுக்காக இதை நாங்கள் செய்கிறோம். எங்கள் அணியின் சுழற் பந்து வீச்சு மிகவும் பிரமாதமாக இருக்கிறது. இளம் வீரர் நூர் தன்னுடைய திறமையை இன்று காட்டினார். குர்பாஷ் மற்றும் இப்ராஹிம் பேட்டிங்கில் நம்பிக்கையுடன் விளையாடி மற்ற வீரர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்று ஹஸ்மத்துல்லாஹ் கூறினார்.