பெங்களூர்: சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதி சுற்றில் டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மத்தியப் பிரதேச அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. மத்திய பிரதேச அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் 29 பந்துகளில் 6 சிக்ஸ் உட்பட 66 ரன்கள் விளாசி ஆட்டத்தை முடித்து அசத்தினார்.
கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதர் 395 ரன்களை விளாசி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக விராட் கோலிக்கு பின் இளம் வீரரை தயார் செய்யும் வகையில் ரஜத் பட்டிதரை ரூ.11 கோடிக்கு ரீடெய்ன் செய்து ஆர்சிபி அணி ஆச்சரியம் கொடுத்தது. இதனால் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக ரஜத் பட்டிதர் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் ரஜத் பட்டிதர்-க்கு அற்புதமான வாய்ப்பு அமைந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் அரையிறுதி சுற்றில் மத்திய பிரதேச அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணியின் கேப்டன் பட்டிதர் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுஅக்ள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பதோனி 16 பந்துகளில் 19 ரன்களும், அனுஜ் ராவத் 24 பந்துகளில் 33 ரன்களும் சேர்த்தனர். மத்திய பிரதேச அணி தரப்பில் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பின் களமிறங்கிய மத்திய பிரதேச அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஹர்ப்ரீத் சிங் பாட்டியா - ரஜத் பட்டிதர் இருவருண் இணைந்தனர்.
ஒரு பக்கம் ஹர்ப்ரீத் சிங் நிதானமாக ரன்களை சேர்க்க, இன்னொரு பக்கம் ரஜத் பட்டிதர் ருத்ர தாண்டவம் ஆடினார். ஸ்பின்னர்களை வெளுப்பதில் கில்லாடியான ரஜத் பட்டிதர், ஹர்ஷ் தியாகி வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இறுதியாக 15.4 ஓவர்களில் மத்திய பிரதேச அணி இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்றது.

அதிரடியாக ஆடிய ரஜத் பட்டிதர் 29 பந்துகளில் 6 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 66 ரன்களை விளாசினார். இதன் மூலமாக சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டிக்கு மத்திய பிரதேச அணி தகுதி பெற்றுள்ளது. நாளை மறுநாள் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து மத்திய பிரதேச அணி களமிறங்கவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் வலிமை வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றால், ரஜத் பட்டிதரின் மதிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்லும். இந்த சீசனில் மட்டும் 8 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரஜத் பட்டிதர் 4 அரைசதங்கள் உட்பட 347 ரன்களை குவித்து அபார ஃபார்மில் இருப்பது ஆர்சிபி அணி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.