நல்ல காலம் ஆரம்பிச்சிருச்சு... கும்ப்ளேவை வாழ்த்தி வரவேற்கும் கவாஸ்கர்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டிருப்பதை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வரவேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு இனி நல்ல காலம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
கும்ப்ளே நல்ல திட்டமிடலுக்குப் பெயர் போனவர். அனுபவம் நிறைந்தவர். அவரால் அணிக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். பயிற்சியாளராக அவருக்கு அனுபவம் இல்லை என்றாலும் கூட வீரர்களுடன் நல்லுறவைப் பேணி அவர்களின் திறமையை வெளிக் கொணரும் திறமை கும்ப்ளேவுக்கு உள்ளதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், பயிற்சியாளராக விளங்க பட்டம் பெறத் தேவையில்லை. நல்ல நிர்வாகியாக இருந்தால் போதும். கும்ப்ளேவிடம் அந்தத் தகுதி உண்டு.

தகுதியானவர்
தனது அனுபவத்தை, அறிவை இந்திய வீரர்களிடம் புகுத்தி அவர்களை திறமையாக விளையாட வைக்க அவரால் முடியும். அந்தத் தகுதி உடையவர்தான் கும்ப்ளே.

ஒரு வருட காலம் போதும்
அவருக்கு ஒரு வருட காலம் ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. ஒரு வருட காலம் என்பது போதுமானதே. அதற்குள் தன்னையும் கும்ப்ளேவால் நிரூபிக்க முடியும். வீரர்களுக்கும் பயன் கிடைக்கும்.

ஈடுபாடு காட்டுவார்
முந்தைய பயிற்சியாளர்கள் வீரர்களுடன் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டதில்லை. ஆனால் கும்ப்ளே அப்படி இருக்க மாட்டார். வீரர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் திறமையை வெளிக் கொணர முயற்சிப்பார்.

உதவியாக இருப்பார்
கும்ப்ளேவிடமிருந்து நிறைய விஷயங்களை வீரர்களும் பெற்றுக் கொள்ள முடியும். அவர் மீது வீரர்களுக்கு நிறைய மரியாதையும் உண்டு. குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு கும்ப்ளே நிறைய உதவிகரமாக இருப்பார்.

துணையாக இருப்பார்
கடைசியில் விளையாடி வெற்றி பெறப் போவது வீரர்கள்தான் என்றாலும், கும்பளே அவர்களுக்கு முழுத் துணையாக ஒத்துழைப்பாக இருப்பார் என்பதில் ஐயம் இல்லை.


Click it and Unblock the Notifications