புதுச்சேரி: மத்திய மண்டல அணிக்கு எதிரான தியோதர் டிராபி போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடி சதம் விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடங்கிய சாய் சுதர்சனின் விஸ்வரூபம், அடுத்தடுத்த தொடர்களில் அதிகரித்து கொண்டே செல்கிறது. டிஎன்பிஎல், இந்தியா ஏ அணி என்று சாய் சுதர்சனின் அதிரடியில் வேறு லெவல் வீரராக மாறினார். இதனால் விரைவில் இந்திய அணிக்கு சாய் சுதர்சன் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் தியோதர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய மண்டல அணியை எதிர்த்து தென் மண்டல அணி விளையாடியது. இதில் முதல் முதலில் பேட்டிங் ஆடிய மத்திய மண்டல அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் விளாசியது. அதில் யாஷ் துபே 77 ரன்களும், சிவம் மாவி 38 ரன்களும் விளாசினர்.
அதேபோல் தென் மண்டல அணி தரப்பில் மோகித் ரெட்கர் 3 விக்கெட்டுகளையும், அர்ஜுன் டெண்டுல்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து தென் மண்டல அணி தரப்பில் ரோஹன் - மயங்க் அகர்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் மயங்க் அகர்வால் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற, சாய் சுதர்சன் களமிறங்கினார். அதில் ரோஹன் 24 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜெகதீசன் 19 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து ரோகித் ராயுடு - சாய் சுதர்சன் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாய் சுதர்சன் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினார். ஆனால் ரோகித் சர்மா 37 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். இதன்பின் அதிரடிக்கு மாறிய சாய் சுதர்சன் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய அவர், சதம் விளாசி மிரட்டினார். இறுதிவரை ஆடிய சாய் சுதர்சன் 136 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார்.
இறுதியாக தென் மண்டல அணி 48.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 262 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. இதன் மூலம் தியோதர் டிராபி இறுதிப்போட்டிக்கு தென் மண்டல அணி முன்னேறியுள்ளது. ஒவ்வொரு தொடரிலும் சீரான ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் விரைவில் இடமளிக்க வேண்டும் என்று தமிழக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.