மும்பை: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்ற பிரம்மாண்டமான கிரிக்கெட் திருவிழாவை உருவாக்கிய லலித் மோடி, அமெரிக்காவில் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து தனது அதிரடியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். விராட் கோலி, தோனி போன்ற மாபெரும் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் அமெரிக்க கிரிக்கெட் முன்னேற வாய்ப்பில்லை என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டி 2024 டி20 உலகக் கோப்பையின் சில போட்டிகளை நடத்தியும், மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) போன்ற தொடர்களை அறிமுகப்படுத்தியும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடுமையாக முயற்சி செய்து வரும் நிலையில், லலித் மோடியின் இந்தக் கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

சமீபத்தில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் குறித்து, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லிடம் தான் தொலைபேசியில் பேசியதை லலித் மோடி வெளிப்படுத்தினார்.
"மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இப்போதுதான் முடிந்தது. நான் என் நண்பன் கிறிஸ் கெய்லுக்கு ஃபோன் செய்தேன். 'கிறிஸ், டெக்சாஸில் இருக்கிறாய். அங்கே எப்படி இருக்கிறது சூழல்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'என் சகோதரனே, இது டெட் ஆக இருக்கிறது' (My brother, it's dead) என்றார்.
ஸ்டேடியத்தில் யாருமே இல்லை. ஒருத்தர் கூட இல்லை. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வருவதால் அமெரிக்காவில் இந்த விளையாட்டு வளர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த பத்து ஆண்டுகளிலோ, அடுத்த பத்து ஆண்டுகளிலோ, ஏன் அடுத்த 50 ஆண்டுகளிலோ கூட அது நடக்காது" என்று லலித் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள், விராட் கோலி, எம்.எஸ். தோனி போன்ற உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் விளையாடினால் மட்டுமே பணம் செலவழித்துப் பார்க்க வருவார்கள் என்று மோடி ஆணித்தரமாகக் கூறினார்.
"நான் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு தொழிலதிபராக யோசிக்கிறேன். விராட் சிங் என்பவர் துஷ்யந்த் சிங்கிற்கு எதிராக விளையாடுவதைப் பார்க்க நான் ஏன் பணம் செலவழிக்க வேண்டும்? எனக்கு அவர்களை யார் என்றே தெரியாது. நான் என் பணத்தை விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, மைக்கேல் கிளார்க், பிரட் லீ போன்றவர்களைப் பார்க்கவே செலவழிப்பேன். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்கள் தங்களுக்குத் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்க்கவே விரும்புவார்கள்," என்றார்.
மற்ற உலக விளையாட்டுகளுடன் ஒப்பிட்டு, அமெரிக்காவில் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கசப்பான உண்மையை மோடி விளக்கினார். "என்.பி.ஏ (கூடைப்பந்து), என்.எஃப்.எல் (அமெரிக்க கால்பந்து), பேஸ்பால் போன்ற விளையாட்டுகளை அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டிலாவது பார்க்கிறார்களா? இல்லை."
"உலக விளையாட்டான கால்பந்தை எடுத்துக் கொண்டாலும், அமெரிக்காவில் அதைப் பார்ப்பவர்கள் யார்? பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மெஸ்ஸியை கொண்டு வந்துள்ளனர். கிளப் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், $400-க்கு நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட்டுகளை, வெறும் $13-க்குக் கூட விற்க முடியவில்லை என்பதுதான் இன்றைய நிலை" என்று அவர் குறிப்பிட்டார்.
"2024 டி20 உலகக் கோப்பையின் போது, நியூயார்க்கில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமே மைதானம் நிரம்பியது. வேறு எந்தப் போட்டிக்கும் கூட்டம் வரவில்லை. இந்தியாவில் ரஞ்சி டிராபியை யாராவது பார்க்கிறார்களா? இல்லை. மக்கள் நட்சத்திர வீரர்களைப் பார்க்கவே விரும்புகிறார்கள். இந்திய நட்சத்திரங்கள் இல்லையென்றால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏன் மேஜர் லீக் கிரிக்கெட்டைப் பார்க்கப் போகிறார்கள்?" என்று லலித் மோடி கேள்வி எழுப்பினார்.