
அதிகரித்துள்ள ரசிகர்கள்
உலக அளவில் ஆண்கள் கிரிக்கெட்டிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றனர். பெண்கள் கிரிக்கெட்டிற்கு அத்தகைய ரசிகர்கள் இருப்பதில்லை. ஆனால் சமீப காலங்களில் இந்த விஷயத்தில் சிறிதளவு மாற்றம் காணப்படுகிறது. கடந்த மார்ச் 8ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் 86,174 ரசிகர்கள் மைதானத்தில் கண்டுகளித்தனர். டிவி ரசிகர்கள் தனி.

வீராங்கனைகள் ஆலோசனை
இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஐசிசி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, கடந்த வாரங்களில் நியூசிலாந்த கேப்டன் சோப்பி டிவைன் மற்றும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் வெபினாரில் கலந்துரையாடினர். அப்போது, சிறிய பந்து மற்றும் குறுகிய பிட்ச்கள் போன்றவற்றை மகளிர் கிரிக்கெட்டில் மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

சிறந்த பலன் அளிக்காது
இந்நிலையில், அந்த அறிவுரைகளை தான் பார்த்ததாகவும், அவை அனைத்துமே இயல்பான தன்மைக்கு மாறாக அளிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் என்றும் இந்திய பௌலர் ஷிகா பாண்டே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொடர் பதிவுகளை பகிர்ந்துள்ளார். பந்தின் அளவை குறைப்பதையாவது ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அதன் எடையை குறைப்பது சிறந்த பலனை அளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

பலத்தை நிரூபிக்கும் வீராங்கனைகள்
அதே அளவில் எடை பராமரிக்கப்ப்டடால் மட்டுமே பௌலர்கள் அதை கிரிப்பாக பிடித்துக் கொள்ள முடியும் என்ற இயான் ஸ்மித்தின் கருத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ள ஷிகா பாண்டே, சமீப காலங்களில் மகளிர், தங்களின் பலத்தை நிரூபித்து வருவதாகவும் இது வெறும் தொடக்கம்தான் என்றும் தெரிவித்துள்ளார். தாங்கள் திறமை மிக்கவர்கள் என்றும், இது மேலும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெரிய முதலீடுகள்
போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதை காட்டிலும் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்த விளம்பரப்படுத்துவதில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஷிகா பாண்டே கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல, மகளிர் கிரிக்கெட்டில் பெரிய அளவிலான முதலீடுகள், சமமான விளையாட்டு வாய்ப்புகள் போன்றவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











