ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடருக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி லீக் சுற்றுப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர்நோவாஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், அந்த அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெலாசிட்டி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சூப்பர்நோவாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிரியா புனியா 16, சாமாரி அத்தப்பட்டு 31 ரன்கள் எடுத்தனர்.
அவர்கள் இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரீகஸ் அதிரடியாக ரன் குவித்தார். அவர் 48 பந்துகளில் 77 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்து வந்த சோபி 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் குவித்தது.
எளிதாக எட்டக் கூடிய இந்த இலக்கை நோக்கி ஆட வந்த வெலாசிட்டி அணியில் டேனியல் வியாட் தவிர, மற்ற வீராங்கனைகள் விரைவாக ரன் குவிக்கவில்லை. அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் மேத்யூஸ் 11, ஷஃபாளி வர்மா 2 ரன்களில் வெளியேறிய நிலையில், டேனியல் வியாட், மிதாலி ராஜ் கூட்டணி அமைத்தனர்.
டேனியல் வியாட் 33 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அவர் சென்ற பின், மிதாலி ராஜ் - வேதா கிருஷ்ணமூர்த்தி ஜோடி நிதானம் காட்டியது. 20 ஓவர்களில் வெலாசிட்டி அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. மிதாலி 40, வேதா 30 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்களது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ ஒட்டியே இருந்தது. இருவரும் சேர்ந்து சுமார் 71 பந்துகளை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற சூப்பர்நோவாஸ் அணியும் தோல்வி அடைந்த வெலாசிட்டி அணியும் நெட் ரன் ரேட் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அணியான ட்ரெய்ல்ப்ளேசர்ஸ் அணியும் மற்ற இரண்டு அணிகளுக்கு இணையாக இரண்டு புள்ளிகள் பெற்று இருந்தாலும் நெட் ரன் ரேட் குறைவாக இருந்ததால் இறுதிக்கு முன்னேறவில்லை.