டி20 உலகக்கோப்பை
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பத்து நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் அரையிறுதிச் சுற்று முடிவடைந்துள்ளது. இறுதிப் போட்டி மகளிர் தினமான மார்ச் 8 அன்று நடைபெற உள்ளது.
அரையிறுதிப் போட்டிகள்
அரையிறுதிச் சுற்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளும் மோத இருந்தன. அந்த இரண்டு போட்டிகளும் ஒரே நாளில் சிட்னி மைதானத்தில் நடைபெற இருந்தது. போட்டி நாளன்று மழை கடுமையாக பெய்தது.
விதிமுறை என்ன?
ஒருவேளை மழை காரணமாக போட்டி நடக்காமல் போனால், அல்லது பாதியில் கை விடப்பட்டால் குரூப் சுற்றில் முதல் இடம் பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என விதி முறையில் கூறப்பட்டு இருந்தது.
இந்தியா தகுதி
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் முன் கடும் மழை பெய்தது. டாஸ் கூட போட முடியாத அளவுக்கு மழை பெய்ததை அடுத்து போட்டி கை விடப்பட்டது. அதனால், குரூப் ஏ பிரிவில் தான் ஆடிய நான்கு போட்டிகளிலும் வென்று, முதல் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியா போராட்டம்
அடுத்து நடக்க இருந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டி மழை பெய்யாத நேரத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்தது. இன்னிங்க்ஸ் இடைவேளையில் மீண்டும் மழை பொழிந்தது.
தென்னாப்பிரிக்கா தோல்வி
ஒருவேளை அப்போது மழை நிற்காமல் போயிருந்தால் குரூப் பி பிரிவில் முதல் இடம் பெற்ற தென்னாப்பிரிக்கா இறுதிக்கு முன்னேறி இருக்கும். ஆனால், மழை நின்று, 13 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்ட சேஸிங்கில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென்னாப்பிரிக்கா கேப்டன் பேச்சு
இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், ஊடகங்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டேன் வான் நீகெர்க் கூறுகையில், "உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இலவச அனுமதி கிடைத்து போவதற்கு பதில் தோற்று விடுவதே மேல்" என கூறினார்.
இந்தியாவை சொன்னாரா?
தென்னாப்பிரிக்கா போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், போட்டியில் ஆடாமல், நேரடியாக தகுதி பெற்ற இந்திய அணியைத் தான் தென்னாப்பிரிக்க கேப்டன் குத்திக் காட்டி பேசி இருக்கிறார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. சிலர் அவர் இந்தியாவை கூறவில்லை என்றும் கூறுகின்றனர்.
ஹர்ஷா போக்லே விளக்கம்
இந்த நிலையில், இதற்கு கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே விளக்கம் கொடுத்துள்ளார். இலவச அனுமதி பெறுவது நமது வாய்ப்பு அல்ல அது வேறு வழியில்லாமல் அப்படி நடந்தது என்பதை சுட்டிக் காட்டி உள்ள அவர், அது இலவச அனுமதியும் இல்லை. குரூப் சுற்றில் அபாரமாக ஆடியதற்கான தகுதி எனவும் விளக்கமாக கூறி இருக்கிறார்.
இறுதிப் போட்டி எப்போது?
குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா உள்பட நான்கு அணிகளையும் வீழ்த்தி இருந்த இந்திய அணி, இந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதியில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது இந்திய அணி.