இந்திய மகளிர் அணி அபாரம்
ஆஸ்திரேலியாவில் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் கடந்த 21ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்திலும், இதையடுத்து வங்கதேசத்துடன் மோதிய போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
மெல்போர்னில் நாளை நடைபெறுகிறது
இந்நிலையில் இந்தியாவின் 3வது போட்டியாக மெல்போர்னின் ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நாளை பிற்பகல் இந்தியா -நியூசிலாந்து ஆணிகள் மோதும் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வென்று தங்களது வெற்றியை ஹாட்ரிக்காக மாற்ற இந்திய மகளிர் தீவிரத்துடன் உள்ளனர். மேலும் இந்த போட்டியில் வெற்றிபெறுவதன்மூலம் அரையிறுதியை நோக்கி இந்தியா முன்னேறும்.
இந்திய மகளிர் அபார ஆட்டம்
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்துடன் மோதிய இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், தான் இடம்பெற்றுள்ள 5 அணிகளை கொண்ட ஏ அணியில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துடனான போட்டியில் வெற்றி கொண்டால் நாக்-அவுட் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.
சொதப்பிய கேப்டன்
கடந்த இரண்டு போட்டிகளிலும் 16 வயதான இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 29 மற்றும் 39 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார். இதேபோல ஜெமிமா, வேதா போன்ற வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடிய நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சொதப்பினார். ஆனால் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகள் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்த பூனம் யாதவ் மற்றும் ஷிகா பாண்டே சிறப்பு கவனத்தை பெற்றுள்ளனர்.
அணியை பலப்படுத்தும் தீப்தி
இந்நிலையில் உடல்நிலை காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியில் பங்கேற்காத தீப்தி ஷர்மா இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் 49 ரன்களை குவித்துள்ள நிலையில், மிடில் ஆர்டரில் இவரது பங்கு அணிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
நியூசிலாந்தை வென்ற இந்தியா
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடரின் 3 போட்டிகளிலும் அந்த அணியிடம் தோற்ற இந்திய மகளிர் அணி, அதற்கு முந்தைய ஆண்டில் மகளிர் டி20 உலக கோப்பையை 34 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் இருந்து கைப்பற்றியது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.