மும்பை : மகளிருக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மூன்றாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இருபதாம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடுகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளனர்.
குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. இதில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை வரும் அக்டோபர் நான்காம் தேதி நியூசிலாந்து எதிராக விளையாடுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம், அக்டோபர் ஆறாம் தேதியும், அக்டோபர் ஒன்பதாம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இந்தியா விளையாடுகிறது. அக்டோபர் 13ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடர் முதலில் வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் துபாய் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், இம்முறை டி20 உலக கோப்பையில் இந்தியா வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இம்முறை நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
என் அணியை பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால் பல வீராங்கனைகள் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று நன்றாகவே தெரியும். டி20 உலக கோப்பையில் வெல்வதற்கான சிறந்த அணி தற்போது எங்களிடம் இருக்கின்றது.
பூஜா மற்றும் ரேணுகா போன்ற வீராங்கனைகள் எங்களுக்கு முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்து தருகிறார்கள். இதைப் போன்று அருந்ததி ரெட்டி சில ஓவர்கள் வீசி இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்யக்கூடிய வீராங்கனையாக இருக்கிறார். எங்கள் அணியில் உள்ள பந்துவீச்சு படையை மற்ற அணியுடன் ஒப்பிட்டு என்னால் பேச முடியாது.
ஏனென்றால் ஒவ்வொரு அணியிலும் சில நல்ல விஷயங்களும் இருக்கும். எதிர்மறையான விஷயங்களும் இருக்கும். ஆனால் என் அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆசிய கோப்பை போட்டியில் நாங்கள் நன்றாக தான் தொடர் முழுவதும் விளையாடினோம். ஆனால் ஒரு மோசமான நாள் அமைந்ததால் நாங்கள் இறுதி போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவினோம்.
டி20 போட்டியில் மனதளவில் நெருக்கடி ஏற்படும். இதன் காரணமாக பயிற்சி முகாமில் நாங்கள் மனதத்துவ நிபுணர்வுடன் அதிகமாக உரையாடினோம். நெருக்கடியான கட்டத்தை எப்படி கையாள வேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் பேசினோம். எங்களுடைய மனத்தத்துவ நிபுணர் எங்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
அவருடன் பேசியது எங்களுக்கு நிச்சயம் நன்மையை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் மனதளவில் நாங்கள் சிறந்த முறையில் உணர்கிறோம் என்று ஹர்மன்பிரித் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் அமோல் மசுமூதார், இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக பத்து நாட்கள் பயிற்சி முகாம் நடந்ததாகவும், இதில் முழுக்க முழுக்க வீராங்கனைகளின் உடல் தகுதி மேம்படுத்த பயிற்சி வழங்கப்பட்டதாகவும் கூறினார்.