ஐசிசி மகளிர் உலக கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
டெர்பி: ஐசிசி மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில், இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. டெர்பியில் இந்த போட்டி நடைபெற்றது. டாசில் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய பூணம் ரவுட் 16, மந்தனா 8 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த தீப்தி சர்மா, மிதாலி ராஜ் ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
தீப்தி சர்மா 78 ரன்கள் குவித்தார். 110 பந்துகளில் 10 பவுண்டரியுடன் இந்த ரன்களை எடுத்து அசத்தினார். சிறப்பான ஆடிய மிதாலி ராஜ் 53 ரன்கள் எடுத்தார். 78 பந்துகளில் 4 பவுண்டரி உதவியுடன் இந்த ரன்களை விளாசினார்.
இவர்களை தொடர்ந்து இறங்கிய பின் வரிசை வீரர்களான ஹர்மன்பிரீத் கவு 20, வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்கள் எடுக்க இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை எடுத்தது.
இந்திய அணியைத் தொடர்ந்து 233 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலானி மனோடரா 61 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications