பிரிஸ்டோல்: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது.
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் மோத வேண்டும்.
லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை அணிகளை தொடர்ச்சியாக தோற்கடித்த இந்திய அணி, முந்தைய லீக் ஆட்டத்தில் 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாசில் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூனம் ரவுத் 106 ரன்கள் குவித்தார். 136 பந்துகளில் 11 பவுண்டரிகள் உதவியுடன் இந்த ரன்களை அவர் எடுத்தார். அதேபோல் கேப்டன் மிதாலி ராஜ் 69 ரன்கள் சேர்த்தார். மித்தாலி ராஜ் இந்தத் ஆட்டத்தில் 33 ரன்களை எடுத்தபோது மகளிர் ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்தார்.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான போல்டன் மற்றும் மூனி ஆகியோர் சிறப்பான ரன்குவிப்பில் ஈடுபட்டனர். போல்டன் 36, மூனி 45, மெக் லன்னிங் 76, பெர்ரி 60 ரன்கள் எடுத்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வியடைந்த போதும், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அடுத்ததாக, நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. அந்தப் போட்டியில் வெற்று பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.