லீசெஸ்டர்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் நிலைகுலைந்த இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தத் தொடரில் இந்தியாவின் முதல் தோல்வி இது.
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் மோத வேண்டும். அதன்படி முதல் நான்கு போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி இன்று தனது 5வது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர் லிசெல்லி லீ 65 பந்துகளில் 10 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உதவியுடன் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் நீகெர்க் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டான போதிலும், இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 60 ரன்களும், ஜூலன் கோஸ்வாமி 43 ரன்களும் எடுத்தனர். இந்தத் தொடரில் இந்திய அணியின் முதல் தோல்வி இதுவாகும்.