லண்டன்: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை புரிந்துள்ளார்.
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியுள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பூனம் 86 ரன்கள், மந்தனா 90 ரன்கள் கேப்டன் மிதாலி ராஜ், 73 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியோடு, 71 ரன்களை விளாசினார்.இது அவரின் 7வது அரைசதம் ஆகும்.
இந்தப் போட்டியில் மிதாலி ராஜ் அரைசதம் கடந்தபோது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 7 முறை அரைசதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு தொடர்ந்து 70*, 64, 73*, 51*, 54, 62* & 71 (இன்றைய போட்டியும் உட்பட) அரை சதம் எடுத்துள்ளார் மிதாலி ராஜ்.
மகளிர் கிரிக்கெட்டில் 177 சர்வதேச போட்டிகளில் விளையாடி 5781 ரன்களை கடந்த 2வது வீராங்கனை மிதாலிதான். உலக அளவில் இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸுக்கு அடுத்து அதிக ரன்களைக் குவித்திருப்பவர் மிதாலி ராஜ்.
இந்தியாவில் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பில் பத்தில் ஒரு பங்குகூட மகளிர் கிரிக்கெட்டுக்கு இல்லாத நிலையிலும், உலக அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பல சந்தர்ப்பங்களில் சாதனை புரிந்து நிரூபித்து வருகிறார்.