டெல்லி: இருபது ஓவர் உலகக் கோப்பை மகளிர் போட்டியில் இங்கிலாந்தை 5 ரன்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
பெண்களுக்கான 5 - வது ஐ.சி.சி. உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் லேனிங் 55 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய விக்கெட் கீப்பர் ஹீலி 25 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ரூத் சீவிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கணைகள் எட்வர்ட்ஸ், பீயாமோண்ட் முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் குவித்தனர். எட்வர்ட்ஸ் 31 ரன்களும், பீயாமோண்ட் 32 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து டெய்லர் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அடுத்தவந்த இங்கிலாந்து வீராங்கணைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்களில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீசிய ஃபேரல் மிக கச்சிதமாக பந்துவீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
மும்பையில் நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஆஸ்திரேலியா மோத உள்ளது. இறுதிப் போட்டி கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.