டெல்லி: உலகக் கோப்பை பெண்கள் டி20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது.
5 - வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சனா மிர் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

இந்தியாவின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜும், வனிதாவும் களமிறங்கினார்கள். வனிதா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான மிதாலி 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில் அதிகப்பட்சமாக வேதா 24 ரன்கள் எடுத்தார். இந்திய வீராங்கனைகள் அடித்து ஆட தவறி விக்கெட்களை இழந்ததால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியைத் தொடர்ந்து களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. ஆட்டத்தின் 16 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ய தொடங்கியது. இதனை அடுத்து போட்டி நிறுத்தப்பட்டது.
மழை நிற்காமல் தொடர்ந்து பெய்துக்கொண்டு இருந்ததால் டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டநாயகியாக பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் அனாம் அமின் தேர்வு செய்யப்பட்டார்.