தரம்சாலா: உலக கோப்பை இருபது ஓவர் பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள், எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் தடுமாறினர். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது
இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன் பிரீத் கவுர் 26 ரன்களும், மிதாலி ராஜ் 20 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஹெதர் நைட் 3 விக்கெட்டுகளும், அன்யா ஷ்ரப்சோல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதே சமயம் இந்திய வீராங்கனைகளின் சீரான பந்துவீச்சால் இங்கிலாந்தின் வெற்றிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி
4 ஓவரில் 12 ரன்கள் தேவைபட்ட நிலையில், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 3 விக்கெட்களை இங்கிலாந்து பறிகொடுத்து தடுமாறியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இதையடுத்து இந்திய அணி வெற்றிப் பெறலாம் என்ற நிலையும் உருவானது. ஆனால் இங்கிலாந்து அணி 19-வது ஓவர் முடிவில் 92 ரன்கள் என்ற இலக்கை எட்டியதால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடிய போதும் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா சார்பில் ராஜேஸ்வரி 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாமி பியூமாண்ட் (20), சாரா டெய்லர் (16), நடாலி (19) ரன்கள் எடுத்தனர். 3 விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்தின் ஹீதர் நைட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.