
ஆஸ்திரேலிய டி20 தொடர்
இந்த தொடரின் கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 25) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இல்லை என்றும் இன்று காலை ராஜீவ் காந்தி மைதானத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தனர்.

டிக்கெட்கள் விற்பனை
இதனையடுத்து டிக்கெட் பெறுவதற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் நள்ளிரவு முதலே ஐதராபாத் மைதானத்தை நோக்கி படையெடுத்தனர். நேரம் போக போக, டிக்கெட் கவுண்டரும் திறக்காத சூழலில் கூட்டமும் கூடிக்கொண்டே சென்றது. ஒருகட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ரசிகர்கள் குவிந்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் தடியடி
ரசிகர்களை ஒழுங்குப்படுத்துவதற்காக வந்த காவல்துறையினர் திடீரென அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்த தொடங்கினர். முதலில் சிறிதாக நடத்துகிறார்கள் என்று பார்த்தால், கையில் சிக்கும் அனைவரையும் அடித்து துரத்தினர். இதனால் டிக்கெட் வாங்க வந்திருந்த ரசிகர்கள் வலி தாங்க முடியாமல் அலறி ஓடினர்.
பெண்ணின் கதறல்
இந்நிலையில் இந்த கலவரத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் இளம் பெண் ஒருவர் மீது பலரும் விழுந்து நசுக்கினர். போலீசார் தடியடி நடத்துவதால் அப்பெண்ணின் கதறல் கூட யாருக்குமே கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணை பார்த்து சிலர், காப்பாற்றுங்கள் எனக்கூறிய போதும் போலீசார் கண்டுக்கொள்ளாமல் அடிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

மருத்துவமனைக்கு விரைவு
இறுதியில் கூட்டம் கலைந்த பிறகு அந்த இளம் பெண் செகண்ட்ரா பாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரின் உடல்நலம் குறித்து இன்னும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் காவல்துறையையும், ஐதராபாத் கிரிக்கெட் வாரியத்தையும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications