மும்பை: ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு நடத்தப்படுவது போன்று பெண்கள் அணிகளுக்கும் ஐபிஎல் போட்டி நடத்த வேண்டும் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அன்ஜும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு போதிய வரவேற்பில்லை. அதனால் பெண்கள் கிரிக்கெட்டை பிரபலமாக்க இந்திய கிரிக்கெட் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்திய பிறகு பெண்கள் கிரிக்கெட்டிற்கும் மவுசு ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறோம்.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் பிரபலமாக்க ஆண்களைப் போன்று பெண்களுக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு போதிய பெண் வீராங்கனைகள் உள்ளனர். திறமையான வீராங்கனைகளும் இருக்கின்றனர் என்றார்.