கொழும்பு: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய வர்ணனையாளருமான சனா மிர், வர்ணனையின்போது 'ஆசாத் காஷ்மீர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்தச் சர்ச்சை ஒருபுறம் சமூக வலைதளங்களில் அனலைக் கிளப்ப, மறுபுறம் களத்தில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்து இரட்டை அடியைச் சந்தித்தது.
கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்தச் சம்பவம் அரங்கேறியது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது, 29வது ஓவரில் வீராங்கனை நடாலியா பர்வைஸ் களமிறங்கினார். அப்போது அவரது பின்னணி குறித்துப் பேசிய சனா மிர், அவர் 'காஷ்மீரைச்' சேர்ந்தவர் என்று முதலில் கூறிவிட்டு, உடனடியாகத் தன்னைத் திருத்திக்கொண்டு, அவர் 'ஆசாத் காஷ்மீரைச்' சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.
சனா மிர் குறிப்பிட்ட 'ஆசாத் காஷ்மீர்' என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் குறிக்கும் சொல்லாகும். சட்டப்பூர்வமாக இந்தியாவிற்குச் சொந்தமான இந்தப் பகுதியை, பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்துவரும் மிகவும் பதட்டமான ஒரு பிரச்சினையாகும்.

இந்தச் சூழலில், ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியின் வர்ணனையில், சனா மிர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது, இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வர்ணனையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, சனா மிரின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விளையாட்டுப் போட்டிகளில் இதுபோன்ற அரசியல் கருத்துக்களைத் திணிப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் என்று பலரும் அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வர்ணனை அறையில் இந்த சர்ச்சை வெடித்துக் கொண்டிருக்க, களத்தில் பாகிஸ்தான் அணியின் நிலைமையும் படுமோசமாக இருந்தது. வங்கதேச அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் வெறும் 129 ரன்களுக்குச் சுருண்டது.
வங்கதேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மரூஃபா அக்தர், தனது முதல் ஓவரிலேயே பாகிஸ்தானின் தொடக்க வீராங்கனைகளான ஒமைமா சோஹைல் மற்றும் சித்ரா அமீன் ஆகிய இருவரையும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்கச் செய்து, பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
அதன்பிறகு வந்த வீராங்கனைகளும் நிலைத்து நின்று ஆடத் தவறினர். வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்களான நஹிதா அக்தர் மற்றும் ஷோர்னா அக்தர் ஆகியோரின் சுழலில் சிக்கி பாகிஸ்தான் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டுப் போலச் சரிந்தது. எளிய இலக்கைத் துரத்திய வங்கதேச அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று பாகிஸ்தானுக்குப் பேரதிர்ச்சி கொடுத்தது.