மும்பை: இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி, தங்களது முதல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. நாடு முழுவதும் இந்த வெற்றி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி, "ஹர்மன்ப்ரீத் கௌர் கேப்டன் பதவியிலிருந்து விலகி, தனது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, இந்திய அணியின் மற்றொரு முன்னாள் கேப்டனான அஞ்சும் சோப்ரா, கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். சாந்தா ரங்கசாமியின் கருத்து குறித்துக் கேட்டபோது, அஞ்சும் சோப்ரா தனது விமர்சனத்தை வெளிப்படையாக கூறினார்.

"ஒவ்வொரு உலகக் கோப்பைக்குப் பிறகும் இப்படி ஒரு கருத்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த நான்கு அல்லது ஐந்து உலகக் கோப்பைகளை எடுத்துப் பாருங்கள், எத்தனை முறை இது போன்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்பதை நீங்களே பார்க்கலாம். இந்திய அணி ஒரு தொடரில் தோற்றால், 'ஹர்மனை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்கிறார்கள். இப்போது இந்திய அணி ஒரு தொடரை வென்ற பிறகும், 'ஹர்மனை நீக்க வேண்டும்' என்கிறார்கள்" என்று அஞ்சும் சோப்ரா காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், "இந்த வெற்றித் தருணத்தின் கொண்டாட்டத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை. அதனால், இதுகுறித்து இப்போது மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று கூறி தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.
அஞ்சும் சோப்ராவும், ஹர்மன்ப்ரீத் கௌரும் மிக நெருங்கிய நட்புறவைக் கொண்டவர்கள். உலகக் கோப்பையை வென்ற பிறகு கூட, ஹர்மன்ப்ரீத் தனது ஆரம்ப காலத்தில் அஞ்சும் சோப்ரா அளித்த ஆதரவை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
ஹர்மன்ப்ரீத்துடனான தனது பயணம் குறித்துப் பேசிய அஞ்சும் சோப்ரா, "அவர் எங்களுடன் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய முதல் நாளிலேயே நான் அவரைக் கவனித்தேன். 2007-08ல் மும்பையில் நடந்த சேலஞ்சர் டிராபி போட்டியில், அவர் ஒரு அண்டர்-19 வீராங்கனையாக இருந்தபோதே, பந்தை மிக நீண்ட தூரம் அடிக்கும் திறனைக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஸ்பெஷல் வீராங்கனை என்பதை நான் அப்போதே உணர்ந்தேன்" என்றார்.
"முதல் நாளிலிருந்து இன்றுவரை, ஒரு கணம் கூட அவர் ஒரு மேட்ச்-வின்னர் இல்லை என்று நான் நினைத்ததே இல்லை. அதனால்தான், ஹர்மன்தான் நமது கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக வெளிப்படையாகக் கூறி வருகிறேன்" என்று தனது நம்பிக்கையை அஞ்சும் சோப்ரா வெளிப்படுத்தினார்.