மும்பை: 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 87 ரன்கள் குவித்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்து ஆட்ட நாயகி விருது வென்றார் ஷஃபாலி வர்மா. சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டு கால சாதனையை முறியடித்து, மிக இளம் வயதில் சர்வதேச அரைசதம் அடித்தார். ஒருபுறம் கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்தாலும், மறுபுறம் 10-ம் வகுப்பில் தோல்வியைச் சந்தித்து, பின்னர் விடாமுயற்சியுடன் படித்து 12-ம் வகுப்பில் 80% மதிப்பெண்கள் பெற்றார்.
ஜனவரி 28, 2004-ல் ஹரியானாவின் ரோஹ்தக் நகரில் பிறந்த ஷஃபாலி வர்மாவின் முதல் குரு, அவரது தந்தை சஞ்சீவ் வர்மா தான். கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாததால், அதைத் தனது மகளின் மூலம் நனவாக்க விரும்பினார். ஆனால், அன்று ரோஹ்தக்கில் பெண்களுக்கெனத் தனியாக கிரிக்கெட் அகாடமி இல்லை. தளராத ஷஃபாலி, சிறுவன் போலத் தனது தலைமுடியை வெட்டிக்கொண்டு, சிறுவர்களுடன் சேர்ந்து பயிற்சி பெற்றார். 2013-ல் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ரஞ்சிப் போட்டியை ரோஹ்தக்கில் விளையாடியபோது, கூட்ட நெரிசலில் மணிக்கணக்காகத் தனது தந்தையின் தோளில் அமர்ந்து அந்த ஆட்டத்தைப் பார்த்தார் ஷஃபாலி.

2019-ல் தனது 15-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற ஷஃபாலி, வந்தது முதலே சாதனைகளை அடுக்கத் தொடங்கினார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டு கால சாதனையை முறியடித்து, சர்வதேச அரைசதம் அடித்த இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் இந்தியாவுக்காக விளையாடிய மிக இளம் வயது வீராங்கனை ஆனார். 2023-ல், அவரது தலைமையிலான இந்திய அணி, முதல் முறையாக நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
ஒருபுறம் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டாலும், கல்வியிலும் தனது கவனத்தைச் சிதறவிடவில்லை ஷஃபாலி. 2019-ல் 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த அவர், அடுத்த ஆண்டே ஹரியானா திறந்தநிலைப் பள்ளி மூலம் தேர்வு எழுதி 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
அதன்பிறகு, தனது விடாமுயற்சியால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக, ஆங்கிலப் பாடத்தில் 100-க்கு 93 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
கல்வியில் ஏற்பட்ட சறுக்கல் போன்றே அவரது கிரிக்கெட் வாழ்விலும் சறுக்கல் ஏற்பட்டது. எப்போதும் அதிரடியாக ஆடும் ஷஃபாலி வர்மாவின் ஆட்டம் டி20 போட்டிகளில் அணிக்கு உதவினாலும், ஒருநாள் போட்டிகளில் விரைவில் ஆட்டமிழப்பது அணிக்கு பின்னடைவாக இருந்தது. அதனால் அவரை உலகக்கோப்பை தொடருக்கான ஒருநாள் அணியில் முதலில் தேர்வு செய்யவில்லை.
பின்னர் தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல் காயம் அடைந்ததால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் ஷஃபாலி வர்மா. பின்னர் இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி கோப்பை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார்.