மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று தந்த தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார், இறுதிப் போட்டிக்கு முன்பு வீராங்கனைகளிடம் ஆற்றிய உரை தற்போது இணையத்தில் பிரபலமாகி உள்ளது. "சத்தம் இல்லாத ஏழு மணி நேரம்" என்று அவர் பேசிய அந்த உரை, ஷாருக்கான் நடித்த புகழ்பெற்ற 'சக் தே இந்தியா' திரைப்படத்தில் வரும் "சத்தர் மினிட்" (70 நிமிடங்கள்) வசனத்துடன் ஒப்பிடப்பட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த உரை திட்டமிடப்படாதது என்றும், மனதிலிருந்து சுயமாக வெளிவந்தது என்றும் அமோல் முஜும்தார் விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) அளித்த சிறப்பு பேட்டியில், தனது உரை மற்றும் உலகக் கோப்பை பயணத்தின் மறக்க முடியாத தருணங்கள் குறித்து முஜும்தார் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, 'சக் தே இந்தியா' திரைப்படத்தில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஊக்குவிக்கும் வகையில் ஷாருக்கான் பேசுவதைப் போலவே தனது பேச்சும் இருந்ததாகக் கூறப்படுவது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "நான் நாடகத்தனமாகப் பேசும் நபர் அல்ல. அதுபோன்ற விஷயங்களிலிருந்து நான் வெகு தொலைவில் இருக்கிறேன். என் இதயத்திலிருந்து நேர்மையாக வருவதை மட்டுமே நான் பேசுவேன். ஷாருக்கானின் வசனத்துடன் என் பேச்சை எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், என் கைப்பேசியில் அது தொடர்பான பதிவுகள் வருவதை நான் பார்க்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒப்பீடுகள் இருந்தால் இருக்கட்டும், அதை என்னால் மாற்ற முடியாது. அரையிறுதிப் போட்டி வரை, ஒவ்வொரு போட்டியின்போதும் வீராங்கனைகள் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பதை நான் முன்பே திட்டமிட்டிருப்பேன். வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சரியான மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருப்பேன்."
"அங்கிருந்துதான் அந்த ஆற்றல் அணி முழுவதும் பரவும். ஆனால், இறுதிப் போட்டியில் நான் பேசிய அந்த 'ஏழு மணி நேரம்' குறித்த பேச்சு முற்றிலும் திட்டமிடப்படாதது. அப்போது என்ன பேசப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. என் தோளை நானே தட்டிக்கொண்டு, அந்த நேரத்தில் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேச வேண்டும் என்று முடிவு செய்தேன். அனைவரும் கூடி இருந்தபோது அந்த வார்த்தைகள் தானாகவே வெளிவந்தன" என்று முஜும்தார் குறிப்பிட்டார்.
இந்த உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகளில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு அணி மீண்டு வந்த விதத்தையும் முஜும்தார் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான 'வாழ்வா சாவா' போட்டியே இந்தத் தொடரின் திருப்புமுனையாக அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். அந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோரின் சதங்களுடன் சாதனை கூட்டணி அமைந்ததால், இந்திய அணி 340 ரன்கள் இமாலய இலக்கை எட்டி, அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.
"நியூசிலாந்துக்கு எதிரான போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம், தோற்றால் உலகக் கோப்பையை விட்டு வெளியேற வேண்டும். அதன்பின் கடுமையான விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும். நாங்கள் ஒரு கத்தியின் முனையில் நின்று கொண்டிருந்தோம்" என்று அந்த தருணத்தை அவர் விவரித்தார்.
"நாங்கள் மைதானத்திற்குள் நுழைந்து, பிரதிகா மற்றும் ஸ்மிருதி மந்தனா இடையேயான கூட்டணி வலுப்பெற்றபோது, ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்த நாளை, நியூசிலாந்துக்கு எதிரான அந்தக் குறிப்பிட்ட போட்டியை, இந்தத் தொடரின் மிகவும் நேசத்துக்குரிய ஒன்றாக நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்" என்றும் முஜும்தார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.