மும்பை: உலகக்கோப்பையை வென்ற வரலாற்றுத் தருணத்தில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தாரின் கால்களைத் தொட்டு வணங்கிய காட்சி, மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த ஒரு செயல், அந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த கடின உழைப்பையும், குரு-சிஷ்ய உறவின் ஆழத்தையும் படம் பிடித்துக் காட்டியது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. மூன்றாவது முறையாக ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடிய இந்திய அணி அதில் வெற்றி பெற்றது உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது.

சொந்த மண்ணில், அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் பெற்ற இந்த வெற்றியை இந்திய வீராங்கனைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகியோர் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர். 2005 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட சோகங்களுக்கு, இந்த வெற்றி ஒரு மருந்தாக அமைந்தது.
இறுதிப் போட்டியின் கடைசி கேட்ச்சை, தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சில் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தே பிடித்தது மிகவும் பொருத்தமாக அமைந்தது. ஆனால், அதைவிட பொருத்தமான ஒரு நிகழ்வு அதன் பின்னர் நடந்தது. அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தபோது, துவண்டு போகாமல், வீராங்கனைகளை ஒன்று திரட்டி, அவர்களுக்குள் நம்பிக்கையை விதைத்த தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தாரின் பங்களிப்பை ஹர்மன்ப்ரீத் ஒருபோதும் மறக்கவில்லை.
வெற்றி உறுதியானதும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், பயிற்சியாளர் அமோல் முஜும்தாரை நோக்கி ஓடிச் சென்று, அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இந்த எதிர்பாராத செயலால் நெகிழ்ந்துபோன முஜும்தார், உடனடியாக ஹர்மன்ப்ரீத்தைத் அணைத்து, அந்த மகத்தான சாதனையின் மகிழ்ச்சியை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
லீக் சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தபோது, இந்த அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, அணியின் நம்பிக்கை அதலபாதாளத்திற்குச் சென்றது.
அந்த நேரத்தில், பயிற்சியாளர் அமோல் முஜும்தார், ஓய்வறையில் வீராங்கனைகளுடன் நடத்திய உரையாடல்தான், அணியின் தலையெழுத்தையே மாற்றியது என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வெற்றிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு வீராங்கனையிடமும் தனித்தனியாகவும், நேர்மையாகவும் பேசி, தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அந்த உரையாடலே, அணி மீண்டும் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்தது.
அதன் பிறகு, அரையிறுதிக்குத் தகுதிபெறக் கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா. அரையிறுதியில், ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபாரமான ஆட்டத்தால் (ஆட்டமிழக்காமல் 127*), மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய சேஸிங்கை நிகழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில், ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தங்களின் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வெல்ல உதவினர். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் அமோல் முஜும்தாரின் பங்கு மிகவும் அதிகம்.