வெலிங்டன்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்றதற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஆட்டம் "மிகச் சிறந்தது" மற்றும் "உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்தது" என்று புகழ்ந்த அவர், ஆஸ்திரேலிய அணி தோற்பது பற்றி பேசி இருப்பது கிரிக்கெட் உலகில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகப் பேசினார். "நேற்றிரவு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியின் ஹைலைட்ஸை நான் பார்த்தேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆட்டம் மிகச் சிறப்பாகவும், உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்ததாகவும் இருந்தது. அவர்கள் இந்த வெற்றிக்கு முற்றிலும் தகுதியானவர்கள். நியூசிலாந்து கோப்பையை வென்றிருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ந்திருப்போம் என்றாலும், இந்திய அணியின் வெற்றிக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்," என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டில் தனது நாட்டின் பரம எதிரியான ஆஸ்திரேலியாவைக் குறிப்பிடும்போது, "ஆஸ்திரேலியாவை யாராவது தோற்கடித்தால் போதும், அதைப் பற்றித்தான் நாங்கள் கவலைப்படுகிறோம். அதை நீங்கள் (இந்திய அணி) சிறப்பாகச் செய்கிறீர்கள்," என்று புன்னகையுடன் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கெட், ரக்பி உட்பட பல்வேறு விளையாட்டுகளிலும் நீண்ட காலமாகப் போட்டி மனப்பான்மை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி, முதல் முறையாகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்குப் பிறகு, மகளிர் உலகக்கோப்பையை வென்ற நான்காவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷஃபாலி வர்மாவின் அதிரடியான 87 ரன்களின் உதவியுடன் 298 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தபோதும், தீப்தி ஷர்மாவின் அபாரமான பந்துவீச்சால் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தீப்தி ஷர்மா 9.3 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
பேட்டிங்கில் 87 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் என ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஷஃபாலி வர்மா ஆட்ட நாயகி விருதையும், தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட தீப்தி ஷர்மா தொடர் நாயகி விருதையும் வென்றனர்.