இந்திய அணி பேட்டிங்
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஓப்பனிங் வீராங்கனைகள் சஃபாலி வெர்மா (10) மற்றும் ஸ்மிருதி மந்தனா (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் - ஜெமீமா ரோட்ரிக்ஸ் தூண் போன்று நின்றனர்.
அசத்தல் பார்ட்னர்ஷிப்
அதிரடியாக விளையாடிய ஜெமீமா 53 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 76 ரன்களை விளாசினார். அவருக்கு உறுதுணையாக நின்று விளையாடிய கேப்டன் ஹர்மன் ப்ரீத் 30 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். இதன்பின்னர் வந்த வீராங்கனைகள் ஓரளவிற்கு அதிரடி காட்ட 20 ஒவர்களில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்தது.
சுருண்டது இலங்கை
சுலபமான இலக்கு என நினைத்து வந்த இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே பெவிலியன் நோக்கி பயணித்தனர். அதிகபட்சமாக ஹர்ஷிதா மாதவி 26 ரன்களும், ஹாசினி பெரேரா 30 ரன்களையும் அடித்தனர். இதனால் 18.2 ஓவர்களில் இலங்கை அணி 109 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
வெற்றி பயணம்
இதுவரை 6 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ள இந்திய அணி இந்தாண்டும் தனது முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக வரும் அக்டோபர் 3ம் தேதி மலேசிய அணியையும், அக்டோபர் 4ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியையும் இந்திய வீராங்கனைகள் எதிர்கொள்ளவுள்ளனர்.