தம்புலா: 2024 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸில் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. எனினும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதை மறுத்தார்.
2024 மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் நிதா தார் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டி நடைபெற்ற தம்புலா மைதானத்தின் பிட்ச் துவக்கத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டதால் இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. எனினும், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதை மறுத்தார்.
அவர் டாஸ் குறித்து பேசுகையில், "இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் அல்லது பவுலிங் என எதை செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில், இங்கு 40 ஓவர்களுக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலை தான் இருக்கும். எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியம். இது முதல் போட்டி என்பதால் இதிலிருந்து நாங்கள் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்" என்றார்.
2024 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி இது என்பதால், முதல் போட்டியிலேயே பாகிஸ்தான அணியை இந்தியா வீழ்த்தி தொடரை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.