தம்புலா: இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டி இன்று (ஜூலை 19) நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. கிரிக்கெட்டில் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
தற்போது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த போட்டி இலங்கையில் உள்ள தம்புலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு துவங்க உள்ள இந்த போட்டியின் போது மழை பெய்யுமா? என்ற சந்தேகம் உள்ளது. தற்போது இலங்கையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்தப் போட்டி நடைபெறும் நாளில் பகல் நேரத்தில் தம்புலாவில் கடுமையாக மழை பெய்யும் என வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் நேரத்தில் இரண்டு சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், மாலை நேரத்தில் அதிக வேகத்தில் காற்று வீசும் எனவும், வானத்தில் மேகமூட்டம் இருக்காது எனவும், ஈரப்பதம் 78 சதவீதம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
எனவே, இந்தியா பாகிஸ்தான் போட்டி முழுமையாக நடைபெறும் எனக்கு கணிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டி நடைபெற உள்ள தம்புலா மைதானத்தின் பிட்ச் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. அங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 160 ரன்களும், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 140 ரன்களும் குவித்து இருக்கின்றன.
எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம், இந்த போட்டி நடைபெறும் நாள் அன்று பகல் நேரத்தில் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்பதால் பிட்ச் நிச்சயமாக ஈரப்பதமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் முதலில் பந்து வீசும் அணிக்கு பிட்ச் சாதகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.