மிர்பூர் : வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்தியா 2க்கு1 என்ற கணக்கில் வென்றது.
இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை தீர்மாணிக்க கூடிய கடைசி ஒருநாள் போட்டி மிர்பூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீராங்கனைகள் சுல்தானா மற்றும் ஃபர்கனா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.
ஷமிமா 52 ரன்களில் வெளியேற, கேப்டன் நிகர் சுல்தானா 24 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய தொடக்க வீராங்கனை ஃபர்கனா 107 ரன்கள் எடுத்தார். இதனால், வங்கதேச மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 225 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் வீராங்கனைகள் களமிறங்கினர்.
தொடக்க வீராங்கனை செஃபாலி வர்மா 4 ரன்களிலும், யாண்திகா பாட்டியா 5 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதனையடுத்து ஸ்மிருதி மந்தானா மற்றும் ஹர்லின் தியோல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து, தத்தளித்த இந்திய அணியை காப்பாற்றினர்.
இதில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 59 ரன்களில் வெளியேற, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் நடுவரின் தவறான முடிவால் 14 ரன்களில் வெளியேற, இந்திய அணி மீண்டும் சரிவை சந்தித்தது. தீப்தி சர்மா 1 ரன்னிலும், அமன்ஜோத் கவுர் 10 ரன்களிலும், ஸ்நே ரானா மற்றும் தீபிகா வைத்யா டக் அவுட் ஆகினர்.
இருப்பினும் ஜெமிமா தனி ஆளாக போராடி இந்தியாவை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றார். வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில், 4 பந்துகள் எஞ்சி இருந்தது. இந்தியாவுக்கு ஒரு விக்கெட் தான் கைவசம் இருந்தது. ஆனால் கடைசி பேட்டரான மேக்னா அவுட்டாக, போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து வங்கதேச வீராங்கனைகள் தொடரை சதன் செய்ததை கொண்டாடி தீர்த்தனர்.