மிர்பூர் : மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திடம் இந்திய அணி முதல் முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. வங்கதேசத்திற்கு சுற்றுப் பயண் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனை ஷர்மின் அக்தர் டக் அவுட்டாக, முர்சிதா 13 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஃபர்கனாவும், சுல்தானாவும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

கேப்டன் சுல்தானா அதிகபட்சமாக 39 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபர்கனா 27 ரன்களில் வெளியேறினார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற, வங்கதேச மகளிர் அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 44 ஓவராக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும் 154 ரன்களாக மாற்றி அமைக்கப்பட்டது.
இதனை அல்வா சாப்பிடுவது போல் இந்திய வீராங்கனைகள் எட்டி விடுவார்கள் என்று நினைத்தால், வந்த அனைவரும், பேட்டிங்கே தெரியாத மாதிரி விளையாடி ரசிகர்களை வெறுப்பேற்றினர். ஸ்மிருமி மந்தானா 11 ரன்களிலும், பிரியா பூனியா 10 ரன்களிலும் வெளியேறினர்.
யாஷ்திகா பட்டியா 15 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 5 ரன்களில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிகியூசும் 10 ரன்கள் மட்டுமே சேர்க்க இந்திய மகளிர் அணி 61 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து தீப்தி சர்மாவும் (20 ரன்கள்) , அமன்ஜோத் கவுரும் (15 ரன்கள்) இணைந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுக்க, இருவரும் முக்கிய கட்டத்தில் வெளியேறினர். இறுதியில் தேவிகா 10 ரன்களில் அவுட்டாக, மற்ற வீராங்கனைகளும் சொதப்பியதால் இந்திய மகளிர் அணி 35.5 ஓவரில் 113 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி , வங்கதேசத்திடம் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவியது. இந்திய வீராங்கனைகளின் பேட்டிங் படுமோசமாக இருப்பதால் ரசிகர்களும் கடும் விரக்தியில் உள்ளனர்.