துபாய்: 2024 மகளிர் டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. தற்போது வங்கதேசத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. தினமும் கலவரங்கள் நடந்து வரும் நிலையில் அங்கு உலகக் கோப்பை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவில் உலகக் கோப்பையை நடத்த முயற்சி செய்தது. ஆனால், பிசிசிஐ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.
வங்கதேசத்திலேயே உலகக் கோப்பையை நடத்தவும் முயற்சிகள் நடந்தன. ஆனால், வங்கதேச கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த பலரும் பதவி விலகி உள்ளனர். மேலும், வங்கதேசத்திற்கு பயணம் செய்வது ஆபத்தானது என இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகள் தங்கள் மக்களுக்கு முன்னறிவிப்பை வெளியிட்டு உள்ளன.

அந்த அணிகளின் வீராங்கனைகள் வங்கதேசத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்ற சூழ்நிலையும் இருந்தது. இந்த நிலையில், வங்கதேசத்தின் அருகாமை நாடான இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்தலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. ஆனால், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.
அடுத்த ஆண்டு மகளிர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா தான் நடத்த உள்ளது. மேலும், அக்டோபர் மாதம் இந்தியாவில் மழைக்காலம் என்பதால் டி20 உலகக் கோப்பையை நடத்துவதில் இந்தியாவுக்கு விருப்பம் இல்லை என அவர் தெரிவித்து இருந்தார். இதன் இடையே இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய மூன்று நாடுகள் டி20 உலகக் கோப்பையை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன.
இலங்கையிலும் அக்டோபர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலக கோப்பையை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான வேலைகளை விரைவில் துவங்க உள்ளது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.