மகளிர் டி20 உலகக்கோப்பை.. பழி வாங்கிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பைனல் சென்றது
லண்டன்: 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் ஜூலை 5 ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இங்கிலாந்து மோதவுள்ளது.
கடந்த 2023 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்து இருந்த இங்கிலாந்து அணி தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் தனது சிறப்பான பந்துவீச்சால் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை செய்தார். சரிவில் இருந்த இங்கிலாந்தை மீட்ட கேப்டன் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹெதர் நைட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தது. உலகக் கோப்பை அரையிறுதி வரலாற்றில் இது சாதனையாக அமைந்தது.
சிறப்பாக விளையாடிய நாட் ஸ்கிவர்-பிரண்ட் 47 பந்துகளில் 75 ரன்களும் (11 பவுண்டரிகள், 1 சிக்ஸர்), ஹெதர் நைட் 47 பந்துகளில் 58 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 169/7 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு டாஸ்மின் பிரிட்ஸ் 51 ரன்கள் அடித்து ஓரளவிற்குப் போராடினார். எனினும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன், லாரன் பெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் தொடரில் தோல்வியே சந்திக்காத இரு அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
