துபாய்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு சிக்கலாக மாறி உள்ளது. ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தால், பாகிஸ்தான் உதவியை நாட வேண்டிய நிலையில் உள்ளது இந்திய மகளிர் அணி.
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்திய மகளிர் அணி இடம் பெற்று உள்ளது. இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி அதில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை சந்தித்து உள்ளது. இந்தியா குரூப் ஏ புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன், +0.576 நெட் ரன் ரேட் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த ஐந்து அணிகளில் ஆஸ்திரேலியா மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் குரூப் ஏ புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இலங்கை அணி தான் ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று +0.282 நெட் ரன் ரேட் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது -0.488 நெட் ரன் ரேட் உடன் நான்காவது இடத்தில் உள்ளது.
தற்போது குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் போட்டியும் மட்டுமே மீதம் உள்ளன. இதில் என்ன நடந்தால் இந்திய அணியால் அரை இறுதிக்கு செல்ல முடியும்? என்பது பற்றி பார்க்கலாம். முதலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதிக ரன் வித்தியாசத்தில் அல்லது அதிக பந்துகள் மீதம் இருக்கும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அப்படி நடந்தால் இந்தியா 6 புள்ளிகள் மற்றும் அதிக நெட் ரன் ரேட் உடன் அரை இறுதிக்கு முன்னேறி விடும்.
ஒருவேளை இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், அப்போது நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 16 பந்துகள் மீதம் இருக்கும் வகையிலோ வீழ்த்தினால் 6 புள்ளிகள் பெற்று, இந்தியாவை நெட் ரன் ரேட் அடிப்படையில் முந்தி இரண்டாம் இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறி விடும்.
ஒருவேளை இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால், நியூசிலாந்து அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால் இந்தியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருக்கும். பாகிஸ்தான் அணி 58 ரன்களுக்கு குறைவான வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தால், இந்திய அணி 4 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறும்.
ஆக மொத்தத்தில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அது நடந்தாலே நியூசிலாந்து அணியால் எளிதாக எட்ட முடியாத நெட் ரன் ரேட்டை இந்திய அணி பெற்று இரண்டாவது இடத்தை உறுதி செய்து விடும். அதன் மூலம் அரை இறுதிக்கு முன்னேறி விடும். ஆஸ்திரேலிய மகளிர் தான் ஆடிய கடைசி பத்து போட்டிகளை தொடர்ந்து வென்று இருக்கிறது. அந்த வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடையவும் அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் பாகிஸ்தான் உதவி கிடைத்தால் மட்டுமே இந்திய அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.