துபாய்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு சிக்கலாக மாறி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள குரூப் ஏ பிரிவு போட்டியின் முடிவு இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பை நிர்ணயிக்கப் போகிறது. அதனால், இந்திய அணி பதற்றத்தில் உள்ளது.
2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஐந்து அணிகளில் இலங்கை தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் உள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் பார்க்கும்போது நியூசிலாந்து (+2.900) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா (+1.908) இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் (+0.555) மூன்றாவது இடத்திலும், இந்தியா (-1.217) நான்காவது இடத்திலும் உள்ளன.
இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ளன. அந்த இரு அணிகளும் அடுத்து குரூப் ஏ பிரிவில் மோத உள்ளன. அதன் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியாவின் நெட் ரன் ரேட் சரிவை சந்திக்கும். அது நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.
இந்தியா அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவை, நியூசிலாந்து வீழ்த்தினால் மட்டும் போதாது. அடுத்து இந்திய அணி தனக்கு மீதம் உள்ள இரண்டு குரூப் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணி குரூப் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நெட் ரன் ரேட் இந்திய அணியை விட குறைய வாய்ப்பு உள்ளது.
நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளிடமும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் நிச்சயம் அந்த அணியின் நெட் ரன் ரேட் பெரும் அளவில் சரிவை சந்திக்கும். இதில் ஒவ்வொரு குரூப்பில் இருந்தும் இரண்டு அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறும் என்பதால் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆட உள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற வேண்டும்.
இவை அனைத்தும் நடந்தால் தான் இந்திய அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். ஒருவேளை பாகிஸ்தான் அணி மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று அணிகளில் எந்த இரண்டு அணிகள் அதிக நெட் ரன் ரேட் பெற்றுள்ளதோ அந்த இரண்டு அணிகளும் முன்னேறும்.
தற்போது இந்திய அணியின் நெட் ரன் ரேட் -1.217 ஆக உள்ளது. இது மிகவும் மோசமானது என்பதால் இந்தியா மற்ற அணிகளை நெட் ரன் ரேட் அடிப்படையில் முந்துவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும். எனவே, இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.