ஷார்ஜா: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று ஷார்ஜாவில் தொடங்கியது. முதல் போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே வங்கதேச மகளிர் அணியின் முதல் டி20 உலக கோப்பை வெற்றி ஆகும்.
2014ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர் நடந்த நான்கு டி20 உலகக் கோப்பைகளில் 16 போட்டிகளில் வரிசையாக வங்கதேச மகளிர் அணி தோல்வியை சந்தித்து இருந்தது. 2024 டி20 உலகக் கோப்பை வங்கதேசத்தில் நடைபெற இருந்ததால் அந்த அணி நம்பிக்கையுடன் இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் வங்கதேசத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாறியது. இந்த சூழ்நிலையிலும் தாங்கள் ஆடிய முதல் போட்டியிலேயே வங்கதேச அணி வெற்றியை பதிவு செய்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இந்த போட்டியில் வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்த ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழ்த்தியது. சமீபத்தில் நடந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி கோப்பையை வென்று அசத்தி இருந்தது. இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்து, இலங்கை அணியை 85 ரன்களுக்குள் சுருட்டி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இலங்கை அணியால் எளிதாக ரன் சேர்க்க முடியவில்லை. மேலும், சீரான இடைவெளியில் விக்கெட்டும் வீழ்ந்து கொண்டே சென்றது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் மகளிர் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.