மும்பை: 2025 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ள நிலையில், நடிகையும், பிரபல மாடலுமான மந்திரா பேடி உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் இந்திய மகளிர் அணியின் மறைமுக ஸ்பான்சராக மந்திரா பேடி இருந்ததாகவும், வீராங்கனைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய மந்திரா பேடி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி பெறும் முதல் ஐசிசி கோப்பை இதுதான். இதன் மூலமாக இந்திய மகளிர் கிரிக்கெட் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்திய மகளிர் அணியின் வெற்றியை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மகளிர் வீராங்கனைகளுக்கு ஏராளமான பரிசுகளும், ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2005 காலக்கட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மறைமுக ஸ்பான்சராக நடிகையும், பிரபல மாடலுமான மந்திரா பேடி இருந்தது தெரிய வந்துள்ளது.
சிம்பு நடித்த மன்மதன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மந்திரா பேடி நடித்திருப்பார். அதேபோல் இந்தியில் ஏராளமான படங்களில் மந்திரா பேடி நடித்துள்ளார். ஆனாலும் மாடலிங் துறையிலும், ஒரு வர்ணனையாளருமாக மந்திரா பேடி புதிய உச்சத்தை எட்டினார். ஒரு காலத்தில் கிரிக்கெட் வர்ணனையிலும், இன்னிங்ஸ் பிரேக்கிலும் மந்திரா பேடியின் தாக்கம் உச்சத்தில் இருந்தது.
2006ஆம் ஆண்டு முதலே மகளிர் கிரிக்கெட் பிசிசிஐ கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதற்கு முன்பாக இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. 2003ல் இந்திய வீராங்கனைகளால் ஒரு முறை இங்கிலாந்து செல்வதற்கான பயண டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளனர்.
இதனையறிந்த மந்திரா பேடி, பிரபல நகைக்கடை விளம்பரத்தில் ஈட்டிய மொத்த வருவாயையும் இந்திய மகளிர் அணிக்கு கொடுத்துள்ளார். அதேபோல் பல்வேறு நிறுவனங்கள், தொழில் அதிபர்களையும் நாடி இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியை திரட்ட உதவி செய்திருக்கிறார். அதேபோல் நியூசிலாந்துக்கு சென்ற போது, ஹோட்டலில் தங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இந்திய வீராங்கனைகள் கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.
இறுதியாக சில என்ஆர்ஐ குடும்பங்களுடன் ஹோட்டலில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான கஷ்டங்களை அனுபவித்து இந்திய வீராங்கனைகளை, மகளிர் கிரிக்கெட்டை இன்று உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு மந்திரா பேடியும் முடிந்த வரை உதவிகளை செய்திருக்கிறார். ஆனால் இதுவரை பொதுவெளியில் மந்திரா பேடி பகிர்ந்து கொள்ளாதது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.