நியூயார்க் : மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி விளையாடப்படும் உலக பிளிட்ஷ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரி ஹம்பி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார்.
இதனை தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மூன்று நிமிடமும் ஒரு நகர்த்தலுக்கு இரண்டு வினாடிகள் கூடுதலாகவும் நேரம் வழங்கப்படும். இதனால் போட்டி யோசிக்கவே நேரம் இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெறும்.

இதில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி தோல்வியே தழுவாமல் 9.5 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தார். 11 சுற்றில் எட்டு போட்டிகளில் வெற்றியும்,மூன்று போட்டிகளில் சமனையும் பெற்றார். செஸ் விளையாட்டில் மிகப்பெரிய வீராங்கனைகளாக கருதப்படும் ஜார்ஜியாவின் நானா,போலந்தின் போளினா மற்றும் நடப்பு பிளிட்ஸ் சாம்பியனான ரஷ்யாவின் வாலண்டினா ஆகியோரை வீழ்த்தி வைஷாலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்த பிரிவில் மற்ற இந்திய வீராங்கனைகளான ஹர்னிகா, கோனேரு ஹம்பி,திவ்யா தேஸ்முக் உள்ளிட்ட வீராங்கனைகள் தோல்வியை தழுவினர். இதன் மூலம் தற்போது வைஷாலி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார். அங்கு அவர் சீன வீராங்கனை ஜினர் உடன் புதன் கிழமை விளையாட உள்ளார்.ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவினர். டாப் 20 இடங்களில் எந்த ஒரு இந்திய வீரரும் இடம் பெறவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா மட்டும் 24 வது இடத்தை பிடித்தார். இந்திய வீரர் அர்ஜுன் ஏர்காசியும் தோல்வியை தழுவினார். இதேபோன்று ஏழு முறை உலக சாம்பியன் ஆன நார்வேவின் மேக்னஸ் கார்ல்சன் காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார். பிளிட்ஷ் பிரிவில் அக்கா வைஷாலி ரமேஷ்பாபு கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தம்பி பிரக்ஞானந்தா தோல்வியை தழுவி இருக்கிறார்.