ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா அறிமுகமானார். முதல் போட்டியில் சொதப்பிய அபிஷேக் ஷர்மா, தன்னுடைய இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அபிஷேக் ஷர்மாவுக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தாலும் அவர் தொடக்க வீரராக களம் இறங்க முடியவில்லை.
இன்னும் அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக ஆட முற்பட்டு அபிஷேக் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவின் சொந்த ஊர் பஞ்சாப்தான். பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மாணவனாக அபிஷேக் சர்மா விளங்கினார். யுவராஜ் சிங் தான் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க காரணம் என்று அபிஷேக் ஷர்மா பலமுறை கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் என்ற தொடரில் யுவராஜ் தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அபிஷேக் ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிராக எப்போது விளையாடி வெற்றி பெற்றாலும் அது ஸ்பெஷலாக இருக்கும்.
இந்தப் போட்டியில் என்னுடைய குரு யுவராஜ் சிங் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த போட்டியை நாங்கள் அனைவரும் பார்த்தோம் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அபிஷேக் ஷர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நாங்கள் கடைசி சில போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்தோம். பந்து வீசினோம். முதல் போட்டிக்கு பிறகு தான் நாங்கள் சுதாரித்துக் கொண்டோம்.
அடுத்தடுத்து போட்டிகள் இருந்ததால் பெரிய அளவு நாங்கள் யோசிக்கவில்லை. ஐபிஎல் தொடர் விளையாடும் போது இந்திய அணிக்காக ஒரு முறையாவது விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது அந்த கனவு நிஜமாகிவிட்டது. குறிப்பாக நானும் ரியான் பராக்கும் இணைந்து அறிமுகம் ஆவோம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ஆனால் இது குறித்து நாங்கள் ஏற்கனவே பலமுறை பேசியிருக்கிறோம். எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த கில், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்திய அணி நிர்வாகம் என்னுடைய பந்துவீச்சு மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. நான் என்னுடைய பௌலிங் குறித்து கவனம் செலுத்த முயற்சி செய்து வருகின்றேன் என்று அபிஷேக் ஷர்மா கூறினார்.