லண்டன் : வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆப் லெஜென்ஸ் என்ற கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் அணி பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் யுவராஜ் சிங் தலைமையில் இர்பான் பதான், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் களமிறங்கினர்.
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. ராயுடு பைனலில் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், இன்றைய ஆட்டத்தில் ராயுடு சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்.

எங்கள் அணி வீரர்கள் பந்து வீசிய விதமும் சிறப்பாக இருந்தது. இதேபோன்று என்னுடைய அண்ணன் முக்கியமான கட்டத்தில் பெரிய ஷாட்களை ஆடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார். நாங்கள் தற்போது பார்ட் டைம் கிரிக்கெட் வீரராக தான் இருக்கின்றோம். இந்த சூழலில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்யும் போது கொஞ்சம் கடினமாக தான் இருக்கின்றது.
இந்த வெற்றி அனைத்துக்கும் காரணம் யுவராஜ் சிங் தான் அவர்தான் எங்களை ஒரு அணியாக கட்டமைத்தார். அவர்தான் எங்களிடம் தொடர்பு கொண்டு இந்த தொடரில் விளையாட அழைத்தார். அவர் என்னுடன் பேசும் போது எனது பந்துவீச்சு தேவையில்லை. என்னுடைய சிக்சர் மட்டும்தான் அணிக்கு தேவை. இந்த பணியை செய்யுங்கள் என்று தான் அழைத்தார்.
ஆனால் இறுதி போட்டியில் எனக்கு மூன்று ஓவர்கள் வழங்கி விட்டார் என்று இர்பான் பதன் கிண்டல் அடித்தார். இதனை தொடர்ந்து பேசிய யூசுப் பதான், இந்த தொடர் கொஞ்சம் கடினமாக இருந்தது. சூழலுக்கு ஏற்ற வகையில் நாங்கள் விளையாடினோம். வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இந்த தொடரில் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் முக்கியமான போட்டிகளில் நாங்கள் கிரிக்கெட்டின் மூன்று பிரிவுகளிலுமே நன்றாக விளையாடினோம். இது போன்ற போட்டிக்கு பார்வையாளர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். நான் இன்று சிக்சர் அடித்ததை பார்த்து என்னுடைய மகன் உங்களால் எப்படி இவ்வாறு பேட்டிங் செய்ய முடிகிறது என்று கேட்டார். அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது என்று யூசுப் தான் தெரிவித்தார்.