மும்பை: சமீபத்தில் நடந்த முன்னாள் வீரர்களுக்கான உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த அணி அந்த தொடரின் கோப்பையையும் வென்றது. அதன் பின் அவர்கள் நகைச்சுவை என நினைத்து வெளியிட்ட வீடியோ ஒன்று மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 15 நாட்களில், ஏழு போட்டிகளில் இந்த முன்னாள் வீரர்கள் ஆடினர். அதனால், தங்களின் உடல் மிகவும் சோர்ந்து இருப்பதை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற முயற்சியாக சமீபத்தில் வெளியான இந்தி திரைப்பட பாடலான "தோபா, தோபா" வுக்கு நடனம் ஆடுவது போல தங்கள் கால்களை இழுத்து, இழுத்து மாற்றுத்திறனாளிகள் போல நடந்து வந்து நடனம் ஆடினர்.

அந்தப் பதிவின் கீழ் தாங்கள் மிகவும் மிகவும் சோர்ந்து இருப்பதாக ஹர்பஜன்சிங் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோவில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில், அந்த வீடியோவை பார்த்த மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் பலரும் இது மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வது போல உள்ளது. அவர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். பாராலிம்பிக் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.
இதனிடையே உலகின் முன்னணி பாரா பாட்மிண்டன் வீராங்கனையான மானசி ஜோஷி, இது குறித்து யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். "உங்களைப் போல நட்சத்திரங்கள் இன்னும் அதிக பொறுப்புடன் நடந்து கொண்டு இருக்க வேண்டும். இதுபோல மாற்றுத்திறன் கொண்ட மக்கள் நடந்து வருவதைப் போல செய்து காட்டி கிண்டல் செய்யக்கூடாது. இது நகைச்சுவை அல்ல."
"உங்களது இந்த செயல் எத்தகைய தீங்கு விளைவிக்கும் என்பதது உங்களுக்கு தெரியாது. உங்களை சுற்றி இருப்பவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் அதை பாராட்டுவார்கள். இந்த வீடியோ, இதுபோல அவர்களையும் மற்றவர்களை கிண்டல் செய்ய தூண்டும். மாற்றுத்திறன் கொண்ட மனிதர்களை போல அவர்கள் செய்து காட்டி சிரிப்பார்கள். மாற்றுத்திறன் கொண்டு குழந்தைகள் உங்களுடைய வீடியோவால் நிறைய கேலி, கிண்டல்களை சந்திப்பார்கள். நீங்கள் மாற்றுத்திறன் கொண்ட சமூகத்துக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், இது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்? உங்களது விளம்பர நிறுவனங்கள் எப்படி இது போன்ற ஒரு வீடியோவை பொதுவெளியில் வெளியயிட அனுமதித்தார்கள்? என்பதை எண்ணி நான் அஞ்சுகிறேன்"
"ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் இந்த வீடியோவை புகழ்ந்து வரும் ரசிகர்களளால் நான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். இது எந்த வகையிலும் ஜாம்பவான்கள் செய்வதை போல இல்லை. நீங்கள் போலியோவால் பாதிப்புக்கு உள்ளானவர்களை போல நடந்து காட்டி கிண்டல் செய்து இருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இந்த வீடியோவால் கேலியும், கிண்டலும் செய்யப்படுவார்கள்" என மானசி ஜோஷி கடுமையாக விளாசி இருக்கிறார்.