பிர்மிங்காம்: 2024 உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்த இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி, இந்தியா சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அந்த வெற்றிக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான், "2007 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதற்கு 17 ஆண்டுகள் கழித்து இப்போது நாங்கள் பழி தீர்த்து இருக்கிறோம்" என்று கூறி இருந்தார்.

அவர் அப்படி சொல்ல முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடம் பெற்று இருந்த வீரர்களில் சிலர், தற்போது லெஜன்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்று உள்ளனர்.
அதன் காரணமாகவே 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்தியாவிடம், பாகிஸ்தான் அடைந்த தோல்விக்கு, யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி பழி தீர்த்து இருப்பதாக கூறி இருந்தார் யூனிஸ் கான். அவர் அப்படி பழி தீர்த்ததாக கூறி ஏழு நாட்கள் மட்டுமே ஆன நிலையில்,அதே தொடரின் இறுதி போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது.
லீக் சுற்றில் வெற்றி பெறுவதை விட, இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதே முக்கியம் என்பதையும் இந்தியா சாம்பியன்ஸ் நிரூபித்து காட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இந்தியா அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா சாம்பியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். யூசுப் தான் 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து கடைசி நேரத்தில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.