பிர்மிங்காம்: 2024 உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன்ஸ் அணி வீழ்த்தியது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக இறங்கிய அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் முன்னேறிய போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் இடம் பெற்றிருந்த ஜாம்பவான் வீரர்கள் பலரும் இந்த அணிகளிலும் இடம்பெற்று இருந்தனர்.

அந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி மீண்டும் நடப்பதாக இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சோயப் மாலிக் 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். கம்ரான் அக்மல் 19 பந்துகளில் 24 ரன்களும், ஷான் மக்சூத் 12 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். சோஹைல் தன்வீர் கடைசி ஓவரில் அதிரடியாக ஆடினார். அவர் 9 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
மற்ற போட்டிகளில் எல்லாம் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் 190க்கும் அதிகமாக ரன்கள் குவித்து இருந்த நிலையில், இந்திய அணிக்கு எதிராக விக்கெட்களை இழந்து தடுமாறி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சிலேயே ஆதிக்கம் செலுத்திய இந்தியா சாம்பியன்ஸ் அணி அடுத்து பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டது. துவக்க வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய சுரேஷ் ரெய்னா 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் துவக்க வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் குர்கீரத் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். குர்கீரத் நிதானமாக ஆடினார். அவர் 33 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். அவர் ஐந்து ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார்.
அதன் பின் ஐந்தாம் வரிசையில் இறங்கிய யுவராஜ் சிங் படு நிதானமாக ஆடி ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தார். அப்போது யூசுப் பதான் அதிரடியாக 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து போட்டியை இந்தியா சாம்பியன்ஸ் வசம் கொண்டு வந்தார். அவர் ஒரு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார்.
யுவராஜ் சிங் ஒரு புறம் பந்துகளை சந்திக்கவே திணறி வந்த நிலையில் இர்ஃபான் பதான் களமிறங்கி கடைசி ஓவரின் முதல் பந்தில் ஃபோர் அடித்து இந்தியா அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டி கடைசி ஓவர் வரை சென்றதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு இருந்தது. 19.1 ஓவரில் இந்தியா சாம்பியன்ஸ் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தது.