பிர்மிங்காம்: இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதிய 2024 உலக லெஜண்ட் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் அதிரடியாக ஆடத் துவங்கிய போது பாகிஸ்தான் அணியின் அணிக்கு தோல்வி பயம் ஏற்பட்டது.
அப்போது பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஃபரீத் கான் அம்பத்தி ராயுடுவை உலக லெஜன்ட் டி20 தொடரில் சேர்த்ததே தவறு என குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி தோல்விக்கு முட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அவர் கூறியதை பாகிஸ்தான் ரசிகர்களும் பிடித்துக் கொண்டு, சமூக வலை தளங்களில் அந்தக் கருத்தை சொல்லி இந்திய அணியின் வெற்றி குறுக்கு வழியில் கிடைத்தது என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயன்றனர். இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பது ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களுக்கான டி20 தொடராகும். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மட்டுமில்லாமல் மொத்தம் ஆறு அணிகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர். மினி உலகக் கோப்பை போன்று இந்த தொடர் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் வீரர்கள் மட்டுமே பங்கேற்றார்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களில் சிலர் இன்னும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக்குகளில் மற்ற இளம் வீரர்களுடன் ஆடி வருகிறார்கள். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளர்களாகவோ செயல்பட்டு வரும் முன்னாள் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்றனர்.
இப்படி அனைத்துவித முன்னாள் வீரர்களும் இணைந்து தான் இந்த தொடரில் ஆடி உள்ளனர். இந்த நிலையில், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை இந்தியா சாம்பியன்ஸ் துரத்தியபோது அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடிய போது ஃபரீத் கான் அந்த சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அதில் அம்பத்தி ராயுடு முழுமையாக ஓய்வு பெற்ற வீரர் இல்லை. அவர் இன்னும் உலகம் முழுவதும் உள்ள டி20 லீக் தொடர்களில் ஆடி வருகிறார். அவருக்கு 38 வயது தான் ஆகிறது. எனவே, அவரை முன்னாள் வீரர்களுக்கான லெஜண்ட் டி20 தொடரில் ஆட அனுமதித்திருக்கக் கூடாது. மற்ற வயதான வீரர்களை விட இவர் துடிப்பாக இருப்பதால் எளிதாக ரன் குவிக்கிறார் என்ற கருத்தை முன் வைத்திருந்தார்.
ஆனால், அம்பத்தி ராயுடுவை போலவே 40 வயதை எட்டாத பல வீரர்கள் இந்த தொடரில் ஆடினர். அதே போல, உலகெங்கிலும் உள்ள டி20 தொடர்களில் ஆடும் வீரர்களும் ஆடினர். உதாரணத்திற்கு பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்ற சோயப் மாலிக் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள அனைத்து டி20 தொடர்களிலும் இன்னும் ஆடி வருகிறார்.
அது மட்டுமன்றி, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியில் ஆடிய சர்ஜில் கான் மற்றும் ஆமீர் யாமின் ஆகிய இருவருக்கும் 34 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சொல்வதைப் போல 40 வயதை தாண்டிய, ஓய்வை அறிவித்த வீரர்கள் மட்டுமே இந்த தொடரில் ஆட வேண்டும் என்றால் சோயப் மாலிக், சர்ஜில் கான் மற்றும் ஆமீர் யாமின் ஆகிய மூவரும் இந்த தொடரில் ஆடி இருக்கக் கூடாது.
பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியின் தோல்விக்கு முட்டுக் கொடுக்கவே இது போன்ற சர்ச்சையான கருத்துக்களை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த போட்டியில், 157 ரன்கள் இலக்கை இந்தியா சாம்பியன்ஸ் அணி 19.1 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இருந்தார். யூசுப் பதான் 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்து இருந்தார். இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.