பிர்மிங்காம்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் எனும் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பிர்மிங்காமில் நடைபெற்றது. இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டார்.
அந்த அணியில் ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் போன்ற இந்திய அணியின் முக்கிய முன்னாள் வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். மறுபுறம் இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் (கேப்டன்), இயான் பெல், ரவி போபாரா, சமித் பட்டேல், சைடு பாட்டம் ஆகிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் துவக்க வீரர்கள் பீட்டர்சன் நான்கு ரன்களும், மஸ்டர்ட் 13 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இயான் பெல் 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். ரவி போபாரா 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டும் எடுத்தார். சமித் பட்டேல் அதிரடி ஆட்டம் ஆடி 25 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். ஒவைசி ஷா கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். அவர் 9 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் மூன்று ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இதை அடுத்து இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு 166 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து சேஸிங் செய்த இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா, நமன் ஓஜா ஜோடி அதிரடி துவக்கம் அளித்தது. ஓஜா 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் தலா இரண்டு சிக்ஸ் அடித்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா நிதானமாக ஆடினார். அவர் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்தது யுவராஜ் சிங் படுமோசமாக ஆடி 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இந்திய அணி 13 ஓவரில் 97 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் மற்றும் இர்பான் பதான் அதிரடியாக ஆடினர். 15 வது ஓவர் முதல் இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை துவக்கினர். இர்பான் பதான் 15 பந்துகளில் 22 ரன்களும், குர்கீரத் சிங் 17 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர். இருவரும் தலா இரண்டு சிக்ஸ் அடித்தனர்.
அவர்கள் இருவரும் 19 வது ஓவருக்கு முன் ஆட்டம் இழந்தனர். அப்போது வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதை அடுத்து யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் வெற்றி இலக்கை 19வது பவரில் எட்ட உதவினர். ஹர்பஜன் சிங் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்தியா சாம்பியன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.