பிர்மிங்காம்: 2024 உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இர்பான் பதான் பந்து வீசியதை பார்த்து ரசிகர்கள் வியந்து போய், கொண்டாடி வருகிறார்கள். இந்தப் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில். இந்த வெற்றிக்கு இர்பான் பதானின் பந்து வீச்சு முக்கிய காரணமாகும்.
இந்த போட்டியில், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது இந்திய அணியில் இடம் பெற்று இருந்த ஜாம்பவான் பந்து வீச்சாளர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை கேப்டன் யுவராஜ் சிங் பயன்படுத்தவில்லை. மாறாக, அதிக சர்வதேச அனுபவம் இல்லாத ராகுல் சுக்லா, அனுரீத் சிங், வினய் குமார் மற்றும் பவன் நெகி ஆகியோரையே அவர் அதிகம் நம்பினார். அவர்கள் நால்வருக்கும் அவர்களின் முழு கோட்டாவான நான்கு ஓவர்களையும் முழுமையாக அளித்தார்.

அவர்களின் ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்த போதும் அதிக ரன்கள் குவித்தனர். பின்னர் ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு ஓவர் மட்டும் அளித்தார் யுவராஜ் சிங். அப்போதும் பாகிஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் இர்பான் பதானை அழைத்தார் யுவராஜ் சிங்.
இர்பான் பதான் பந்து வீசிய போது பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர்களான யூனிஸ் கான், சோயப் மாலிக் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறினர். பதான் ஓவரில் சிங்கிள் ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிலும், இர்பான் வீசிய 12 வது ஓவரில் யூனிஸ் கான் பவுல்ட் அவுட் ஆனார். அப்போது இர்பான் பதான் மிக அற்புதமான இன் ஸ்விங் வீசி ஸ்டம்புகளை பறக்க விட்டார்.
அதை உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான யூனிஸ் கானால் கணிக்க முடியவில்லை. 39 வயதான இர்பான் பதானின் அந்த இன் ஸ்விங்கை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அவரது வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. பின்னர் இர்பான் பதான் மூன்று ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அடுத்த இந்தியா சாம்பியன்ஸ் பேட்டிங் ஆடிய போது அம்பத்தி ராயுடு 50 ரன்களும், குர்கீரத் சிங் 34 ரன்களும் எடுத்தனர். யூசுப் தான் 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்தனர்.
கடைசி நேரத்தில் யுவராஜ் சிங் ரன் குவிக்க திணறிக் கொண்டிருந்த போது, இர்பான் பதான் ஏழாம் வரிசையில் களமிறங்கி இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரில் ஒரு ஃபோர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தியா சாம்பியன்ஸ் 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா சாம்பியன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இர்பான் பதானின் பந்துவீச்சு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.