நார்த்தாம்ப்டன் : முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான வேர்ல்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியின் முன்னாள் வீரர்களும் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் இந்திய அணி சாம்பியன்ஸ் அணிக்கு மேலான ஆட்டத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது.
எப்படி நாம் தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது ஏதேனும் ரன் அவுட் ஆகிவிட்டாலும், கேட்ச் மிஸ் செய்து விட்டாலும் அண்ணன் தம்பிக்கு இடையே சண்டை போடுவோமோ, அதை போல் நிஜத்தில் இங்கு அண்ணன் தம்பிக்கு இடையே சண்டை வந்துவிட்டது.

நார்த்தாம்ட்டன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய சாம்பியன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் snyman l 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார் இதேபோன்று லெவி என்ற நபர் 25 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனால் தென்னாப்பிரிக்க சாம்பியன் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஹர்பஜன்சிங் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதை அடுத்து களமிறங்கிய இந்திய சாம்பியன் அணி ஆரம்ப முதலே தடுமாறியது. ராபின் உத்தப்பா 23 ரன்களும், நமன் ஒஜா ஐந்து ரன்களும், சுரேஷ் ரெய்னா 21 ரன்களும், ராயுடு 2 ரன்களும், யுவராஜ் சிங் ஐந்து ரன்களும் எடுத்து தடுமாறினார். 77 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
அப்போது, ஆறாவது விக்கெட்டுக்கு அண்ணனும் தம்பியான யூசுப் பதான், இர்பான் பதான் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடியது. இர்பான் பதான் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க மறுபுறம் யூசுப் தான் பட்டையை கிளப்பினார். ஒரு ஆட்டத்தின் 18 புள்ளி 1 வது ஓவரில் இர்பான் பதான் அடித்த பந்தை காலிஸ் கேட்சை மிஸ் செய்து விட்டார். எனினும் அவர் பந்தை எடுத்து எறிந்தார்.
இதனால் யூசுப் பதான் இரண்டாவது ரன் ஓடாமல் அங்கேயும் நின்று விட்டார். இதனை பார்க்காத இர்பான் பதான் பாதி தூரம் ஓடிவந்து மீண்டும் கிரீஸ்க்கு திரும்புவதற்குள் ரன் அவுட் ஆனார். இதனால் அண்ணன் யூசுப் பதானை பார்த்து ஆக்ரோஷமாக கத்தி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் இர்பான். தம்பி இப்படி அனைவரும் முன் கத்திவிட்டு சென்று விட்டானே என்று யூசுப் பதான் சோகத்தில் இருந்தார். யூசுப் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுக்க இந்திய சாம்பியன் அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.