எட்ஜ்பாஸ்டன்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இந்த டி20 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா என ஆறு அணிகள் பங்கேற்று உள்ளன. முன்னாள் வீரர்களை கொண்ட இந்த ஆறு அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் மற்ற அணிகளுடன் ஒரு முறை போட்டியில் பங்கேற்று வருகின்றன.
இந்த முதல் சுற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். தற்போது யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளை சந்தித்து உள்ளது. புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா சாம்பியன்ஸ் அணியின் நெட் ரன் ரேட் -0.826 ஆக உள்ளது.

அதே சமயம், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி தான் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு முக்கிய அணிகளிடமும் இந்தியா தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கேப்டன் யுவராஜ் சிங் எடுத்த சில முடிவுகள் தவறாக அமைந்தன. அந்த இரண்டு போட்டிகளிலும் ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆர்பி சிங் உள்ளிட்ட இந்திய பந்து வீச்சாளர்களை எதிரணிகள் துவம்சம் செய்தன.
இந்த நிலையில் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா சாம்பியன்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது. இதே புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து சாம்பியன்ஸ், நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி. மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி கூட கிடைக்காமல் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்தியா சாம்பியன்ஸ் அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. அதில் வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.