மும்பை : 90ஸ் கிட்ஸ்களுக்கு யுவராஜ் சிங் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் போன்ற வீரர்கள் மீண்டும் ஒருமுறை விளையாடுகிறார்கள் என்று செய்தி தெரிந்தால் அது நிச்சயம் அவர்களுக்கு கொண்டாட்டம் தான். அப்படி ஒரு பெரிய கொண்டாட்டத்தை தான் இந்திய சாம்பியன்ஸ் அணி தற்போது வழங்கி இருக்கிறது.
இப்போது பல முன்னாள் வீரர்கள் மாதம் ஒரு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலும், டி20 உலக கோப்பை போட்டி போலவே ஒரு சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் தலைசிறந்த பாகிஸ்தான் அணி வீரர்கள், ஆஸ்திரேலியா அணி வீரர்கள், இந்திய அணி வீரர்கள் பங்கேற்றதால் இந்த தொடர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள யுவ்ராஜ் சிங் இந்திய அணிக்காக விளையாடி வெற்றியை பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் என்னால் சொல்லி புரிய வைக்க முடியாது.
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய வெறியாகவே இருந்தது. அந்த ஒரு நினைப்பில் தான் நாங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடினோம். தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் மீண்டும் களத்திற்கு திரும்பி விளையாடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் அதை நான் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டேன்.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் போன்ற அணிகள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்றால் நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தோம். அதைத்தான் நாங்கள் செய்தோம். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான பந்துவீச்சை எதிர்கொள்ள நாங்கள் பல்வேறு திட்டங்களை போட்டு வீழ்த்தினோம்.
இந்தத் தொடர் எங்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த தொடர் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் நிச்சயம் பாராட்டத்தக்க விஷயமாகும். இந்த தொடரை நடத்த பல்வேறு நிபுணர்கள் கடும் முயற்சியை செய்து இருக்கிறார்கள். இந்தத் தொடர் (எதிர்காலத்திலும்) இன்னும் சிறந்து விளங்கும் என்று நான் நம்புகிறேன். கோப்பையுடன் நாடு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று யுவ்ராஜ் சிங் கூறினார்.